Advertisement

SL vs ZIM, 2nd ODI: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!

ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 08, 2024 • 23:00 PM
SL vs ZIM, 2nd ODI: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீத்தி இலங்கை த்ரில் வெற்றி!
SL vs ZIM, 2nd ODI: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீத்தி இலங்கை த்ரில் வெற்றி! (Image Source: Google)
Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் கமுன்ஹுகம்வே ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த கும்பி மற்றும் கேப்டன் கிரேக் எர்வின் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கும்பி 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மில்டன் ஷும்பா 26 ரன்களுக்கும், சிக்கந்தர் ரஸா ஒரு ரன்னுக்கும் என ஆட்டமிழந்தனர். 

Trending


இதற்கிடையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த கிரேக் எர்வின் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரியான் பர்ல் தனது பங்கிற்கு 31 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் ஜிம்பாப்வே அணி 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மஹீஷ் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா, ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. 

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சதீரா சமரவிக்ரமாவும் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து குசால் மெண்டிஸ் 17 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சரித் அசலங்கா ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜனித் லியனகே - சஹான் அராச்சிகே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லியனகே அரைசதம் கடந்தார். அதேசமயம் மறுபக்கம் அராச்சிகே 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தசுன் ஷனகா 7 ரன்களுக்கும், மஹீஷ் தீக்‌ஷனா 18 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜனித் லியனகே 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 95 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து 5 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இறுதியில் இலங்கை அணி கடைசி இரண்டு ஓவர்களில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் துஷ்மந்தா சமீரா - ஜெஃப்ரி வண்டர்சே இணை இருந்தனர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துஷ்மந்தா சமீரா 18 ரன்களையும், ஜெஃப்ரி வண்டர்சே 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை அணி 49 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement