
இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா டி20 போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்த இரண்டாவது நபர் என்ற சாதனையப் படைத்துள்ளார்.
அவர் இந்த சாதனையை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் படைத்துள்ளார். பார்படோஸ் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் 7 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மிருதி மந்தனா 5 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 5 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 79 இன்னிங்ஸில் அவர் 2,004 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 27.45 ஆகும். அதில் 14 அரை சதங்கள் அடங்கும். அவர் அதிகபட்சமாக 86 ரன்கள் குவித்துள்ளார்.