
இலங்கை அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அணியில் நட்சத்திர வீரர் ஸாக் கிரௌலி மற்றும் திலான் பென்னிங்டன் ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர். அதேசமயம் அவர்களுக்கு மாற்றாக அறிமுக வீரர் ஜோர்டன் காக்ஸ், மற்றும் ஒல்லி ஸ்டோன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடிய வீரர்களே இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா தொடர்கிறார். இந்த அணியில் அறிமுக வீரர்களான நிசலா தாரகா, மிலன் ரத்னயகே ஆகியோருடன், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெஃப்ரி வண்டர்சேவுக்கும் இலங்கை டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி இன்று முதல் தங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.