
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 50 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்தது. இதில், தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் திமுத் கருணாரத்னே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர்.
நிசாங்கா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். கருணாரத்னே 52 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் உள்பட 78 ரன்கள் சேர்த்தார். இவரைத் தொடர்ந்து வந்த சமீரா சமரவிக்ரமா 44 ரன்கள் சேர்த்தார். கேப்டன் தசுன் சனாகா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். வணிந்து ஹசரங்கா 29 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 29 ரன்களும் எடுக்கவே இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 323 ரன்கள் குவித்துள்ளது.