
எட்டாவது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை (16ஆம் தேதி) தொடங்குகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல 16 அணிகள் கலந்துகொண்டு மோத உள்ளன. ஐசிசி தரவரிசை பட்டியலில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.
இந்த 8 அணிகளும் 22ஆம் தேதி தொடங்கும் சூப்பர் 12 சுற்றில் மோதுகின்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கான அணிகள் முதல் சுற்று ஆட்டங்களில் இருந்து தேர்வாகும். இந்த முதல் சுற்று ஆட்டங்கள் ஜீலாங்கில் உள்ள கார்டினியா பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் சுற்றில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், 2014ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் உள்ளன. இந்த இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் சூப்பர் 12 சுற்றில் கலந்துகொள்ளும். முதல் சுற்றில் இருந்து மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை அணிகள் உறுதியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறக்கூடும். ஏனெனில் இந்த இரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளை காட்டிலும் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை வலுவானவை.