ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்வகையில் முதல் லீக் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியுள்ளார். இதையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனுக்கான சிஎஸ்கே அணியின் கேப்டனாக அதிரடி தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஐபிஎல் 2024ஆம் ஆண்டு தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி தனது கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துள்ளார்” என்று அறிவித்துள்ளது.