
ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இலங்கை மற்றும் நேபாள் ஆகிய அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் நாளை முதல் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் தொடங்குகிறது. விரைவில் நடைபெறும் 2023 உலக கோப்பைக்கு ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் இத்தொடர் ஒருநாள் போட்டிகளாக நடக்க உள்ளது. அதில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்லும் லட்சியத்தை கொண்டுள்ள இந்தியா அதற்கு தேவையான தங்களுடைய இறுதிக்கட்ட 15 வீரர்களை இந்த தொடரிலிருந்து தேர்வு செய்ய உள்ளது.
முன்னதாக ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஆசிய அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இம்முறை 8ஆவது கோப்பையை வென்று சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஆசிய சாம்பியனாக களமிறங்க போராட தயாராகியுள்ளது. இருப்பினும் அதற்கு பரம எதிரியான பாகிஸ்தான் மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மட்டும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் அணியாக இருக்காது என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் நடப்பு சாம்பியனாக இருக்கும் இலங்கையும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாமென எச்சரித்துள்ளார். அதாவது கடந்த ஆசிய கோப்பையில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய இந்தியாவை சூப்பர் 4 சுற்றில் யாருமே எதிர்பாராத வகையில் தோற்கடித்த இலங்கை இறுதியில் பாகிஸ்தானையும் வென்று 6ஆவது கோப்பையை வென்று சாதனை படைத்தது.