
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேமயம் தொடருக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரெடிங் முறையில் மும்பை அணி வாங்கியது. அத்துடன் மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியையும் பறித்து ஹர்த்க் பாண்டியாவை அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரின் போது காலில் காயமடைந்த சூர்யகுமார் யாதவ் தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதையடுத்து அவர் காயத்திலிருந்து மீண்டு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.