
ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
இதில் குரூப் 2வில் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியனான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்திய அணி தனது 2ஆவது லீக்கில் நியூசிலாந்துடன் இன்றிரவு துபாயில் மோதுகிறது. நியூசிலாந்தும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்று இருந்தது.
இரு அணிக்குமே இது வாழ்வா-சாவா போட்டி ஆகும். அதாவது இந்த பிரிவில் பாகிஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் கம்பீரமாக (6 புள்ளி) முதலிடம் வகிக்கிறது. அந்த அணி எஞ்சிய இரு லீக்கில் ஸ்காட்லாந்து, நமிபியாவை சந்திக்க உள்ளது. அதனால் பாகிஸ்தான் அரைஇறுதி சுற்றை எட்டுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.