
பிப்ரவரியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மார்க் வுட்டை ரூ. 7.50 கோடிக்குத் தேர்வு செய்தது லக்னெள சூப்பர் ஜயண்ட்ஸ் அணி. ஆனால் வெஸ்ட் இண்டீஸில் விளையாடச் சென்ற வுட்டுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.
வுட்டுக்குப் பதிலாக வங்கதேச வீரர் டஸ்கின் அகமதுவைத் தேர்வு செய்ய லக்னெள அணி விருப்பம் தெரிவித்தது. 26 வயது டஸ்கின் அகமது, வங்கதேச அணிக்காக 10 டெஸ்டுகள், 47 ஒருநாள், 33 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு டஸ்கின் அகமதுவை அனுப்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. வங்கதேச அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் 3 ஒருநாள், 2 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்கிறது. இந்தச் சுற்றுப்பயணம் ஏப்ரல் 11 அன்று முடிவடைகிறது. இதையடுத்து இலங்கை அணி, வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. இதன் காரணங்களால் டஸ்கின் அகமதுவை ஐபிஎல் போட்டிக்கு அனுப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.