Advertisement

களத்தில் முடிவெடுக்க வேண்டியது உங்கள் வேலை- பந்த் குறித்து ஜாகீர் கான்!

களத்தில் எந்த தருணத்தில் எந்த பவுலரை உபயோகிக்க வேண்டும் என்பது கேப்டனின் வேலையே தவிர வெளியே அமர்ந்திருக்கும் பயிற்சியாளர் ஒவ்வொரு முறையும் வழிகாட்ட முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் ஜாகிர் கான் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan June 11, 2022 • 18:22 PM
‘Team Will Have Meeting Around It’ Zaheer Khan Seriously Questions Rishabh Pant’s Captaincy
‘Team Will Have Meeting Around It’ Zaheer Khan Seriously Questions Rishabh Pant’s Captaincy (Image Source: Google)
Advertisement

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. டெல்லியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 212 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் பந்துவீச்சில் குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் டேவிட் மில்லர் – ராசி வேன் டெர் டுஷன் ஆகியோரை அவுட் செய்ய தவறியதுடன் மோசமாக பந்து வீசி ரன்களை வாரி வழங்கியது. 

அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்தியா சொந்த மண்ணில் முதல் போட்டியிலேயே தலைகுனியும் நிலைமைக்கு உள்ளாகி 1 – 0* என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே பின் தங்கியுள்ளது. முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு எடுப்பதால் அவருக்கு பதில் ரிஷப் பண்ட் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

Trending


கடந்த நவம்பர் மாதம் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த 3 டி20 தொடர்களில் ரோகித் தலைமையில் ஒரு தோல்வியைக் கூட பதிவு செய்யாத இந்தியா 9 தொடர் வெற்றிகளை பெற்று அசத்தியது. அதனால் வழக்கம்போல சொந்த மண்ணில் கில்லியாக ராஜநடை போட்டு வந்த இந்தியாவுக்கு இந்த தோல்வி ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் ரோஹித் சர்மா இல்லாத தருணத்தில் பொறுப்புடன் கேப்டன்ஷிப் செய்ய வேண்டிய ரிஷப் பந்த் முதல் போட்டியில் பந்து வீச்சாளர்களை பயன்படுத்திய விதம் தவறாக இருந்தது. ஏனெனில் முதல் 6 பவர்பிளே ஓவர்களை வீசுவதற்கு 5 பவுலர்களை உபயோகித்த அவர் சமீபத்திய ஐபிஎல் தொடரில் 27 விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை வென்று நல்ல பார்மில் இருக்கும் சஹாலுக்கு 2 ஓவர்கள் மட்டுமே வழங்கினார்.

அவரின் இந்த முடிவு பல முன்னாள் வீரர்கள் அதிருப்தியடைய வைத்தது. இருப்பினும் இளம் கேப்டனாக இருக்கும் அவருக்கு ஒரு பயிற்சியாளராக அந்த குறிப்பிட்ட தருணத்தில் சஹாலை பயன்படுத்துமாறு ராகுல் டிராவிட் சிக்னல் கொடுத்திருக்கலாமே என்று நிறைய பேர் கூறுகின்றனர்.

இந்நிலையில் களத்தில் எந்த தருணத்தில் எந்த பவுலரை உபயோகிக்க வேண்டும் என்பது கேப்டனின் வேலையே தவிர வெளியே அமர்ந்திருக்கும் பயிற்சியாளர் ஒவ்வொரு முறையும் வழிகாட்ட முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் ஜாகிர் கான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “சஹாலுக்கு 4 ஓவர்கள் வழங்காததை பற்றி ரிஷப் பண்ட் கண்டிப்பாக பின்னோக்கிப் பார்க்க வேண்டும். அணி நிர்வாகம் அதைப்பற்றி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒருசில தருணங்களில் சஹால் தடுமாறினாலும் அதிலிருந்து மீண்டெழுந்து விக்கெட்டை எடுக்கும் திறமையை அவர் பெற்றுள்ளார். எனவே எதிரணி பேட்ஸ்மேன் அவுட் செய்ய வேண்டுமெனில் அந்த முடிவை எடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது.

யார் பந்து வீச போகிறார்கள் என்பதை நீங்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும். எனவே கடந்த போட்டியை பின்னோக்கிப் பார்த்து அதில் என்ன செய்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று ரிஷப் பண்ட் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒருவேளை அக்சர் படேல் வீசிய கடைசி ஓவரில் ரன்களை வழங்கியதால் இனிமேல் சுழல் பந்துவீச்சு வேலைக்கு ஆகாது என்று ரிஷப் பந்த் நினைத்திருக்கலாம்.

ஆனால் நீங்கள் எல்லா தருணங்களிலும் அந்தக் கோணத்திலேயே பார்க்க கூடாது. சஹால் போன்ற பவுலர்களிடம் அதையும் தாண்டிய திறமை உள்ளது. மில்லர் – டுஷன் ஆகியோர் பவுலர்களை அடிக்கத் தொடங்கிய போது அந்த 12 பந்துகள் விக்கெட் விழுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும். ஒருவேளை விக்கெட் விழுந்திருந்தால் போட்டி தலைகீழாக மாறியிருக்கும்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement