
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் விராட் கோலி 47 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுபக்கம் அரைசதம் கடந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 54 ரன்கள் சேர்த்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டனார். அதன்பின் களமிறங்கிய விரர்களில் ராஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி 41 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 14, கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.