
நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான போட்டிகள் வெவ்வேறு வித்தியாசமான அனுபவங்களையும் சுவாரஸ்யத்தையும் ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து வருகிறது. இதுபோக ஒவ்வொரு நாடுகளிலும் ஐபிஎல் போன்ற டி20 ப்ரீமியர் லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன. இதனால் மாதத்திற்கு ஒரு கிரிக்கெட் தொடர் மட்டுமே நடைபெற்ற காலம் தலைகீழாக மாறி தற்போது வருடம் முழுவதும் கிட்டத்தட்ட தினந்தோறும் வெவ்வேறு வகையான கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களுக்கு பரிசாக கிடைக்கின்றன.
அதன் காரணமாக அதில் விளையாட்டு வீரர்களுக்கும் முன்பை விட நல்ல பணமும் கெளரவமும் கிடைக்கிறது. ஆனால் உலகத்தரம் வாய்ந்த புகழ்பெற்ற நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர்கள் இந்த அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. ஏனெனில் ரசிகர்களிடம் புகழ்பெற்ற அவர்கள் விளையாடினால் தான் அந்த தொடரை அதிகப் படியான ரசிகர்கள் பார்ப்பார்கள். இருப்பினும் அவர்களும் மனிதர்கள் தானே என்ற வகையில் தொடர்ச்சியாக விளையாடும்போது ஏற்படும் களைப்பு வீரர்களுக்கு பணிச்சுமையை ஏற்படுத்தி அவர்களின் ஆட்டத்தில் சோடையை காட்டுகிறது.
அதனாலேயே விராட் கோலி போன்ற வீரர்கள் இடையிடையே குறிப்பிட்ட சில தொடர்களில் ஓய்வெடுக்கிறார்கள். இருப்பினும் அதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக 31 வயதிலேயே இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணிச்சுமை என்பதையும் தாண்டி பணத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் டி20 கிரிக்கெட் தரத்தை நிரூபிக்க டெஸ்ட் கிரிக்கெட் என தங்களுக்கு பிடித்த கிரிக்கெட்டை தேர்வு செய்யும் கிரிக்கெட் வீரர்கள் இரண்டுக்கும் நடுவில் சுவாரசியம் இல்லாமல் இருக்கும் ஒருநாள் போட்டிகளில் விளையாட விரும்புவதில்லை.