
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் ஓவல் இன்விசிபில் - வேல்ஸ் ஃபையர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வேல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் ஜோ கிளர்க் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் பெரிதளவில் சோபிக்காமல் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் இன்னிங்ஸ் முடிவில் வேல்ஸ் ஃபையர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ கிளர்க் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 69 ரன்களைச் சேர்த்தார். ஓவல் அணி தரப்பில் கஸ் ஆட்கின்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.