இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆந் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி அக்.5ஆம் தேதி அஹ்மதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆனால் போட்டி அட்டவணை வெளியான சில நாட்களிலேயே பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ஆட்டங்களின் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் மொத்தம் 9 போட்டிகளின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. ஆனால் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.