
இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியிலும், செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதிவரையிலும் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கலேவில் நடைபெறவுள்ளது. மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் இத்தொடருக்கன் நியூசிலாந்து அணி கடந்த மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் இலங்கை டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்படும் டிம் சௌதீ பேட்டிங்கில் புதிய மைல் கல் ஒன்றை எட்டவுள்ளார்.
அதன்படி இலங்கை அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் டிம் சௌதீ நான்கு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், வீரேந்திர சேவாக், பிரையன் லாரா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடிப்பார். டிம் சௌதீ இதுவரை 100 டெஸ்டில் 143 இன்னிங்ஸ்களில் விளையாடி 88 சிக்சர்களை அடித்துள்ளார். அதேசமயம் விரேந்திர சேவாக் தனது பெயரில் 91 சிக்ஸர்களை விளாசி 6ஆவது இடத்தில் உள்ளார்.