
டிஎன்பிஎல் 2025: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி நடப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. திண்டுக்கல்லில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், துஷார் ரஹேஜா 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய சாய் கிஷோரும் அதிரடியாக விளையாட, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமித் சாத்விக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 57 ரன்களில் சாத்விக் ஆட்டமிழக்க, 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 33 ரன்களைச் சேர்த்திருந்த சாய் கிஷோரும் விக்கெட்டை இழந்தார். இறுதியில் சசிதேவ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைச் சேர்த்தது.