
ஐபிஎலில் வெற்றிகரமாக அணியாக திகழ்ந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீப காலமாகவே பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றபோது, போட்டிகள் தொடங்கும் முன்பே சுரேஷ் ரெய்னா திடீரென்று நாடு திரும்பி ஷாக் கொடுத்தார். அதற்கான தெளிவான காரணம் இன்னமும் வெளியாகவில்லை. ஏதோ பிரச்சினை இருந்தது மட்டும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மெகா ஏலத்தின்போது கையில் 2 கோடிகள் மீதம் இருந்தும் ரெய்னாவை சிஎஸ்கே வாங்காதது சர்ச்சையை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து ஐபிஎல் 15ஆவது சீசனில் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. கேப்டன்ஸி அனுபவமே இல்லாத அவர், முதல் பாதி ஆட்டங்களில் தொடர்ந்து தோல்விகளைத்தான் அணிக்கு பெற்றுக்கொடுத்தார். மேலும் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் படுமோசமாக சொதப்பினார். இதனைத் தொடர்ந்து கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனி ஏற்றார். அந்த சமயத்தில் தனக்கு காயம் இருப்பதாக கூறி ஜடேஜா கடைசி சில போட்டிகளில் பங்கேற்கவில்லை.
தொடர் தோல்விக்கு ஜடேஜாதான் முழுக்காரணம் என தோனியும், சிஎஸ்கே நிர்வாகமும் விமர்சனங்களை முன் வைத்ததால்தான், அதிருப்தியடைந்த ஜடேஜா கடைசி சில போட்டிகளில் இருந்து விலகிச் சென்றதாக கூறப்பட்டது. மேலும், தோனியின் பிறந்த நாளுக்கு ஆண்டுதோறும் வாழ்த்துகளை தெரிவித்து வந்த ஜடேஜா, இந்த வருடம் வாழ்த்துகளை தெரிவிக்கவில்லை.