
அண்டர் 19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி 7 ரன்களிலும், முஷீர் கான் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அதார்ஷ் சிங் - கேப்டன் உதய் சஹாரன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
அதன்பின் 76 ரன்களில் அதார்ஷ் சிங் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 64 ரன்களில் உதய் சஹாரனும் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்களும் ஓரளவு பங்களிக்க 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மருஃப் ம்ரிதா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.