Unofficial Test: டிராவில் முடிந்த இங்கிலாந்து லையன்ஸ் - இந்தியா ஏ போட்டி!
இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு 4 நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் நான்கு நாள் போட்டியானது கேன்டர்பரியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் இரட்டை சதமடித்ததுடன் 26 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 204 ரன்களையும், துருவ் ஜூரெல் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 94 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 13 பவுண்டரிகளுடன் 92 ரன்களயும் சேர்க்க மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் ஹல், ஸமான் அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து லையன்ஸ் அணியில் அதிகபட்சமாக டாம் ஹெய்ன்ஸ் 19 பவுண்டரிகளுடன் 171 ரன்களையும், டேன் மௌஸ்லி 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 113 ரன்களையும், மேக்ஸ் ஹோல்டன் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 101 ரன்களைச் சேர்த்தனர். இதனால் இங்கிலாந்து லையன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 587 ரன்களைச் சேர்த்தது. இந்திய ஏ அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், ஷர்தூல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 30 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் தங்களில் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 64 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அபிமன்யூஸ் ஈஸ்வரனும் 68 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் ஜோடி சேர்ந்த துருவ் ஜூரெல் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இணையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பூர்த்தி செய்ததும் அசத்தினர். இதன் மூலம் இந்திய ஏ அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களைச் சேர்த்தது. இதன் காரணமக இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூன் 6அம் தேதி நடைபெறவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now