
இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு 4 நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் நான்கு நாள் போட்டியானது கேன்டர்பரியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் இரட்டை சதமடித்ததுடன் 26 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 204 ரன்களையும், துருவ் ஜூரெல் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 94 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 13 பவுண்டரிகளுடன் 92 ரன்களயும் சேர்க்க மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் ஹல், ஸமான் அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து லையன்ஸ் அணியில் அதிகபட்சமாக டாம் ஹெய்ன்ஸ் 19 பவுண்டரிகளுடன் 171 ரன்களையும், டேன் மௌஸ்லி 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 113 ரன்களையும், மேக்ஸ் ஹோல்டன் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 101 ரன்களைச் சேர்த்தனர். இதனால் இங்கிலாந்து லையன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 587 ரன்களைச் சேர்த்தது. இந்திய ஏ அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், ஷர்தூல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.