
இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு 4 நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் நான்கு நாள் போட்டியானது கேன்டர்பரியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் 8 ரன்னிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களிலும், சர்ஃப்ராஸ் கான் 13 பவுண்டரிகளுடன் 92 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் கருண் நாயருடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜூரெலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் துருவ் ஜூரெல் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.இதன்மூலம் இந்திய ஏ அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்களைச் சேர்த்தது.
இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கருண் நாயர் 186 ரன்களுடனும், துருவ் ஜூரெல் 82 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜூரெல் 94 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கருண் நாயர் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 26 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 204 ரன்களில் கருண் நாயர் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஹர்ஷ் தூபே 32 ரன்களையும், ஷர்தூல் தாக்கூர் 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.