
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்திருந்த கர்நாடகா மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் மற்றுன் நிகின் ஜோஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். இதில் நிகின் ஜோஸ் 37 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அனீஷ் கேவி-யும் 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் மயங்க் அகர்வாலுடன் இணைந்த ஸ்மாறன் ரவிச்சந்திரனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயங்க் அகர்வால் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்த ஸ்மாறனும் அரைசதம் கடந்தார். பின் 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 124 ரன்களைச் சேர்த்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழக்க, மறுபக்கம் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 83 ரன்களை எடுத்திருந்த ஸ்மாறனும் விக்கெட்டை இழந்தார். இதனால் கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்களை குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் மிலிந்த் குமார் 3 விக்கெட்டுகளையும், அன்கித் ரெட்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.