
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய அந்த அணியில் சமர்த் 8 ரன்களுக்கும், கேப்டன் மயங்க் அகர்வால் 13 ரன்களுக்கும், நிகின் ஜோஸ் 21 ரன்களிலும், கிருஷ்ணன் ஸ்ரீஜித் 37 ரன்களிலும், மனீஷ் பாண்டே 28 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த அபினவ் மனோகர் - மனோஜ் பந்தகே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்தனர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபினவ் மனோகர் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 91 ரன்னுக்கும், மனோஜ் பந்தகே 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 63 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் கர்நாடகா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்களைச் சேர்த்தது.