
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 2023 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்ற அணிகள் மோதிய காலிறுதிச் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த காலிறுதி சுற்றில் லீக் சுற்றின் ஏ புள்ளி பட்டியலில் 2ஆவது இடம் பிடித்த மும்பை மற்றும் ஈ பிரிவில் 2ஆவது இடம் பிடித்த தமிழ்நாடு அணிகள் மோதின.
ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு சக்சேனா ஆரம்பத்திலேயே முகமது சித்தார்த் வேகத்தில் டக் அவுட்டானார். அந்த நிலைமையில் 2ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தோமர் 24 ரன்களில் சாய் கிஷோர் சுழலில் சிக்கினார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் அஜிங்கிய ரஹானே ஒரு ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் பிஸ்தா 37 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் அந்த அணி 92/4 என தடுமாறிய மும்பைக்கு மிடில் ஆர்டரில் நட்சத்திர வீரர் ஷிவம் துபே 1 பவுண்டரி 4 சிக்சருடன் 45 ரன்களும், பவார் 59 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றி ஆட்டமிழந்தனர். இருப்பினும் 48.3 ஓவரிலேயே மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.