
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சட்டோகிராமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தினேஷ் சண்டிமால் 34 ரன்களுடனும், கேப்டன் தனஞ்செயா டி சில்வா 15 ரன்களுடனும் தொடர்ந்தனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் 59 ரன்களில் சண்டிமாலும், 70 ரன்களில் தனஞ்செயாவும் விக்கெட்டை இழந்தர்.
அதன்பின் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் 92 ரன்களைச் சேர்த்த நிலயில், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 531 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இருப்பினும் இப்போட்டியில் இலங்கை அணி வலிமையான முன்னிலையைப் பெற்றது.