
எஸ்ஏ20 லீக் தொடரின் 3அவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேப்டவுன் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜார்ஜ் லிண்டே மற்றும் டெலானோ போட்ஜீட்டர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜ் லிண்டே 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களையும், போட்ஜீட்டர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 44 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது.
இதனையடுத்து இலக்கை நோக்கி விலையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்கா வீரர் டெவான் கான்வே 9 ரன்களிலும், அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவும் 14 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் ஜோபர்க் அணி 11.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களைச் சேர்த்திருந்தது. அதன்பின் மழை பெய்த காரணத்தால் இப்போட்டி தடைப்பட்டது.