Advertisement

ஐபிஎல் 2022: எழுதி வைத்து சொல்லி அடித்து ஆச்சர்யப்படுத்திய ரிங்கு சிங்!

நேற்றைய போட்டியில் நான் மிகச் சிறப்பாக பெரிய ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை வெல்வேன் என்ற உள்ளுணர்வு எனக்கு தோன்றியது. அதை 50 ரன்கள் என எனது கையில் எழுதி வைத்து மனதில் ஆழமாக பதித்துக் கொண்டேன் என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 03, 2022 • 15:45 PM
WATCH: How Rinku Singh Predicted His Match-Winning Knock On His Palm
WATCH: How Rinku Singh Predicted His Match-Winning Knock On His Palm (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 2-ஆம் தேதி நேற்று நடைபெற்ற 47ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பங்கேற்றன. மும்பை வான்கடே மைதானத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்ற அப்போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா 5 தொடர்ச்சியான தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து 4ஆவது வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியது. 

அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் கடும் போராட்டத்திற்குப் பின் 152/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை தொடர்ந்து 153 என்ற சுலபமான இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 19.1 ஓவர்களிலேயே 158/3 ரன்களை கொல்கத்தா சிறப்பான வெற்றியைப் பெற்றது. 

Trending


இந்த வெற்றிக்கு நிதிஷ் ராணா 48* (37) ரன்கள் விளாசினாலும் கூட 182.61 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விதத்தில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 42* (23) ரன்கள் எடுத்த ரிங்கு சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அலிகார் நகரில் பிறந்த அவர் 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள நிலையில் கடந்த 2018 முதல் கொல்கத்தா அணியில் தொடர்ந்து இருந்து வந்தாலும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்து வந்தார். 

அந்த நிலைமையில் நேற்று கிடைத்த பொன்னான வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட அவர் 5 வருடங்கள் கழித்து ஆட்டநாயகன் விருது வென்றது மிகப்பெரிய மகிழ்ச்சி என்று மெய் சிலிர்த்தார்.

இது பற்றி பேசிய அவர்,“ஒரு சொல்லத் தெரியாத உணர்வு எனது மனதில் இருந்துகொண்டே வந்தது. நான் ஆட்ட நாயகன் விருது வெல்வதற்காக மிக நீண்ட வருடங்கள் காத்திருந்தேன். அது 5 வருடங்கள் கழித்து வந்தாலும் இறுதியாக என்னை வந்தடைந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என கூறினார்.

அதை விட நேற்றைய போட்டியில் தாம் கண்டிப்பாக 50 ரன்கள் அடிக்க போகிறேன் என்ற தன்னம்பிக்கையால் முன்கூட்டியே அதை தனது கையில் எழுதி வைத்துக் கொண்டதாக அதை அவர் போட்டி முடிந்த பின் தன்னுடன் விளையாடிய நிதிஷ் ராணாவிடம் தெரிவித்தார்.

 

இது பற்றி கொல்கத்தா அணி வெளியிட்டுள்ள காணொளியில் உனது கையில் என்ன எழுதியிருக்கிறது என்று நிதிஸ் ராணா கேட்க அதற்கு ரிங்கு சிங் பதில் அளித்தது பின்வருமாறு. “இன்றைய போட்டியில் நான் மிகச் சிறப்பாக பெரிய ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை வெல்வேன் என்ற உள்ளுணர்வு எனக்கு தோன்றியது. அதை 50 ரன்கள் என எனது கையில் எழுதி வைத்து மனதில் ஆழமாக பதித்துக் கொண்டேன்” என்று கூறினார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement