
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம் 6 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 8 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 30 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடி வந்த ஆயூஷ் பதோனி 22 ரன்களுக்கும், அப்துல் சமத் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து ரிஷப் பந்தும் 63 ரன்களில் ஆட்டமிழக்க, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரான 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.