
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்ததுடன் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 68 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடியான தொடக்கத்தை வழங்கி 26 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் மற்றொரு தொடக்க வீரரான் அபிஷேக் சர்மா அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசியதுடன் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.