
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரது அரைசதத்தின் மூலமும், ஜோஸ் பட்லரின் அபாரமான ஃபினிஷிங்கின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 90 ரன்களையு, சாய் சுதர்ஷன் 52 ரன்களையும், ஜோஸ் பட்லர் 42 ரன்களையும் சேர்த்தனர். கேகேஆர் தரப்பில் ஆண்ட்ரே ரஸல், ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் அஜிங்கியா ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தியதுடன் 50 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சோப்பிக்க தவறினர். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்ததுடன் 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் தோல்வியைத் தழுவியது.