Advertisement

இன்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை - ஷாய் ஹோப்!

ஒரு போட்டியில் நாங்கள் சாம்பியன் அணி போல விளையாடி வெற்றி பெறுகிறோம். மற்றொரு போட்டியில் முற்றிலும் தோற்று காலியாகி விடுகிறோம் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 02, 2023 • 10:56 AM
இன்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை - ஷாய் ஹோப்!
இன்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை - ஷாய் ஹோப்! (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது சொந்தநாட்டில் நடைபெற்று வரும் மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியிடம் 1-0 என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்ததால் இந்த தொடரானது சமநிலையில் இருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்று முடிந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்ததால் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Trending


இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப், "நான் எப்பொழுதுமே கூறுவது ஒன்றுதான், போட்டியின் சூழலை கணித்து விளையாட வேண்டியது அவசியம். இந்த மைதானத்தில் இந்திய அணியை நாங்கள் போட்டியின் இறுதி நேரத்தில் சுருட்டியதாக நினைக்கிறோம். ஆனால் போட்டியின் தொடக்கத்தில் எங்களது பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. இருப்பினும் இந்த மைதானத்தில் 350 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான். 

ஆனால் இன்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை. அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இல்லாததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. எப்பொழுது நாங்கள் விளையாட சென்றாலும் எங்களால் வெற்றி பெற முடியும் என்றே நினைப்போம். அதேபோன்று எங்களது அணி வீரர்களிடம் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் மற்றும் ஆட்டிடியூட் தேவையான ஒன்று. ஒரு போட்டியில் நாங்கள் சாம்பியன் அணி போல விளையாடி வெற்றி பெறுகிறோம். மற்றொரு போட்டியில் முற்றிலும் தோற்று காலியாகி விடுகிறோம். இதுதான் தொடர்ச்சியாக நடைபெறுகிறது" என தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement