
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் அடித்தது. இளம் வீரர் ஜெயிஸ்வால் 49 ரன்களும் லோம்ரோர் 17 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 43 ரன்களும் எவின் லூயிஸ் 36 ரன்களும் எடுத்தார்கள். அடுத்து ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களே அடித்தது. ராகுல் 49 ரன்களும் மயங்க் அகர்வால் 67 ரன்களும் எடுத்தார்கள்.
கடைசி இரு ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றி பெற 8 ரன்களே தேவைப்பட்டன. 8 விக்கெட்டுகள் மீதமிருந்தன. மார்க்ரமும் நிகோலஸ் பூரனும் நன்கு விளையாடிக் கொண்டிருந்ததால் 19ஆவது ஓவரிலேயே பஞ்சாப் அணி வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19ஆவது ஓவரை வீசிய முஸ்தபிசூர் ரஹ்மான் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற மற்றொரு எளிதான நிலைமையிலும் பஞ்சாப் அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்ததால் த்ரிலான வெற்றியை ராஜஸ்தான் அணி ருசித்தது. கடைசி ஓவரை அற்புதமாக வீசி 1 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த 20 வயது கார்த்திக் தியாகி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு நம்ப முடியாத வெற்றியைத் தேடித் தந்த கார்த்திக் தியாகி பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.