
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கிய அபித் அலி, இம்ரான் பட், அஷார் அலி ஆகிய முன்னணி வீரர்கள் 3 பேரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம், பவாத் ஆலம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
பின்னர் பாபர் அசாம் 75 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து பவாத் ஆலமும் 76 ரன்னில் காயம் காரணமாக ரிட்டையர் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - ஃபஹீம் அஷ்ரஃப் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.