
நேற்று உலகக்கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்ட போட்டி அமைந்திருந்தது. காரணம் இந்த இரண்டு அணிகளும் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி எதிரணிகளை அனாயசமாக வீழ்த்தி வந்தன.
இப்படிப்பட்ட இரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி எப்படி அமையும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல் போட்டி இந்தியாவின் பக்கம் ஒருதலைபட்சமாக முடிந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலி சதத்துடன் 326 ரன்கள் குவித்துபேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் அசத்தியது.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணி வெறும் 83 ரன்களில் சுருண்டு 243 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் கூட, தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.