
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ர 5ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அதன்படி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு விஷ்மி குணரத்னே - கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் குணரத்னே ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் சமாரி அத்தபத்து 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கவிஷா தில்ஹாரி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை மகளிர் அணி 25 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்ஷிதா மாதவி - நிலாக்ஷி டி சில்வா இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹர்ஷிதா மாதவி 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் அனுஷ்கா சஞ்சீவினி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேற்கொண்டு இறுதிவ்ச்ரை ஆட்டமிழக்காமல் இருந்த நிலாக்ஷி டி சில்வா 29 ரன்களை எடுத்தார். இதனால் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணி தரப்பில் மேகன் ஸ்காட் 3 விக்கெட்டுகளையும், சோஃபி மெலினக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.