
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு திலாரா அக்தர் - சதி ராணி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சதி ராணி 9 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை திலாரா அக்தரும் 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இணைந்த சோபனா - கேப்டன் நிகர் சுல்தானா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சோபனா 16 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தாஜ் நெஹார் ஒரு ரன்னிலும், ஷொர்னா அக்தர் ரன்கள் ஏதுமின்றியும், ரிது மோனி 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிகர் சுல்தானா 4 பவுண்டரிகளுடன் 39 ரன்களை எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.