
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. வதோதராவில் உள்ள கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி மற்றும் லாரா வோல்வார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெத் மூனி அதிரடியாக விளையாடிய நிலையில் மறுமுனையில் லாரா வோல்வார்ட் 6 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலதாவும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த் பெத் மூனி - கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பெத் மூனி அரைசதம் கடந்தார்.
அதன்பின் 8 பவுண்டரிகளுடன் 56 ரன்களைச் சேர்த்த நிலையில் பெத் மூனி ஆட்டமிழந்தார். அதன்பின் ஆஷ்லே கார்ட்னருடன் இணைந்த டியாண்டிரா டோட்டினும் அதிரடியாக விளையாட ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஆஷ்லே கார்ட்னர் அரைசதம் கடந்தார். மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டியாண்டிரா டோட்டின் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 25 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சிம்ரன் ஷேக்கும் 11 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.