
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், இரண்டாவது போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதமாக டாப் ஆர்டர் வீரர்கள் பதும் நிஷங்கா 1, குசால் மெண்டிஸ் 4, குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றியும், சதீரா சமரவிக்ரமா 16 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த சரித் அசலங்கா - ஏஞ்சலோ மேத்யூஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்தனர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 69 ரன்கள் எடுத்த நிலையில் சரித் அசலங்கா விக்கெட்டை இழக்க, மறுப்பக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 66 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி, லுக் ஜோங்வா தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.