17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 32ஆவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ள ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்தில் உள்ள ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த போட்டியில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் தொடர் தோல்விகளைச் சந்தித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கடந்த போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.