Mum vs sau
ரஞ்சி கோப்பை 2022: மீண்டும் அசத்திய சூர்யகுமார் யாதவ்!
இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையின் 2022 – 23 சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 27ஆம் தேதியன்று தொடங்கிய 42ஆவது லீக் போட்டியில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் மும்பை மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதின. எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 289 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் வாசவடா 75 ரன்கள் எடுத்த நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக சம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு பிரிதிவி ஷா 4, யசஸ்வி ஜெய்ஸ்வால் 2 என இளம் அதிரடி தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 6/2 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை காப்பாற்ற முயன்ற கேப்டன் ரகானேவும் 24 ரன்களில் ஆட்டமிழந்ததால் 67/3 என மேலும் தடுமாறியது. ஆனால் முதல் விக்கெட் விழுந்ததுமே 3ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் எதிர்ப்புறம் விக்கெட் விழுவதைப் பற்றி கவலைப்படாமல் வழக்கம் போல ஆரம்ப முதலே தமக்கே உரித்தான அதிரடியான ஸ்டைலில் ரன்களை குவித்தார்.