1st Test, Day 2: ஜிம்பாப்வே 271-க்கு ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் வங்கதேசம்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியைப் பொறுத்தமட்டில் மொமினுல் ஹக் 56 ரன்களையும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ரன்களையும், ஜக்கர் அலி 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெசிங் முசரபானி மற்றும் வெலிங்டன் மஸகட்சா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் மற்றும் பென் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை பென்னட் 40 ரன்களுடனும், பென் கரண் 17 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரையன் பென்னட் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பின்னர் பென் கரண் 18 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிக் வெல்ச்சும் 2 ரன்னுடன் நடையைக் கட்டினார். மேற்கொண்டு 57 ரன்களை எடுத்திருந்த பிரையன் பென்னட்டும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய சீன் வில்லியம்ஸும் அரைசதம் கடந்த நிலையில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 59 ரன்களுக்கும், கேப்டன் கிரேய்க் எர்வின் 8 ரன்களுக்கும், வெஸ்லி மதேவரே 24 ரன்களுக்கும், நியாஷா மாயாவோ 35 ரன்களையும், ரிச்சர்ட் ந்ங்கரவா 28 ரன்களையும், முஸரபானி 17 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் ஜிம்பாப்வே அணியானது 273 ரன்கள் எடுத்த கையோடு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளையும், நஹித் ரானா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் 82 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் ஷாத்மான் இஸ்லாம் 4 ரன்னில் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்துள்ள மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் மொமினுல் ஹக் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
Also Read: LIVE Cricket Score
இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 28 ரன்களையும், மொமினுல் ஹக் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸிங் முசரபானி ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து 25 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.