2nd Test, Day 1: சதமடித்து அசத்திய ஷுப்மன் கில்; வலிமையான நிலையில் இந்திய அணி!

Updated: Wed, Jul 02 2025 23:11 IST
Image Source: Google

Birmingham Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் இந்த தொடரில் தன்னுடைய இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.

இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூலை 02) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேஎல் ராகுல் 2 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பின் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த கருண் நாயர் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். அதேசமயம் கருண் நாயர் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில்லும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பவுண்டரிகளுடன் 87 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஷுப்மன் கில் ஒரு பக்கம் நிதானமாக விளையாடி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ரிஷப் பந்த் 25 ரன்னிலும், நிதீஷ் ரெட்டி ஒரு ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் விளையாட, மறுபக்கம் அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்களைச் சேர்த்துள்ளது. 

Also Read: LIVE Cricket Score

இதில் ஷுப்மன் கில் 114 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வொக்ஸ் 2 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ் மற்றும் ஷோயப் பஷிர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 5 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் இந்திய அணி நாளை இரண்டாம் நாள் அட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை