2nd Test, Day 2: வியான் முல்டர் அபாரம்; தோல்வியைத் தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே!

Updated: Mon, Jul 07 2025 22:40 IST
Image Source: Google

ZIM vs SA, 2nd Test: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வியான் முல்டரின் முற்சதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 626 ரன்களை சேர்த்துள்ளது. 

ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஸோர்ஸி 10 ரன்னிலும், அறிமுக வீரர் செனொக்வானே 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து டேவிட் பெடிங்ஹாம் 82 ரன்களையும், லுவான் ட்ரே பிரிட்டோரிஸ் 78 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன் சதமடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டனர். 

அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வியான் முல்டர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் முற்சத்தை விளாசினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் உண்வு இடைவேளையின் போது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்களைக் குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த வியான் முல்டர் 49 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 367 ரன்களையும், கைல் வெர்ரைன் 42 ரன்களையும் சேர்த்திருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் டனகா சிவாங்கா, குண்டாய் மாடிகிமு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சீன் வில்லியம்ஸ் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் பிரெனலன் சுப்ராயன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Also Read: LIVE Cricket Score

இதனையடுத்து ஃபலோ ஆன் ஆன ஜிம்பாப்வே அணியானது 456 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள நிலையில், அந்த அணியின் தொடக்க வீரர் தியான் மேயர்ஸ் 11 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் ஜிம்பாப்வே அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கைடானோ 36 ரன்களுடனும், நிக் வெல்ச் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் கார்பின் போஷ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனையடுத்து 405 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை