பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாகச் சேர்க்கப்பட்டனர். அதேசமயம் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார். 

Advertisement

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றி மார்க் வுட் வேகத்தில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய ராஜத் பட்டிதாரும் டாம் ஹார்ட்லி வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க, இந்திய அணி 33 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரவீந்திர ஜடேஜா களத்திற்கு வந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா - ரவீந்திர ஜடேஜா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

இதன்மூலம் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா 52 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 2 விக்கெட்டுகளையு, டாம் ஹார்ட்லி ஒரு விக்கட்டையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News