3rd Test, Day 4: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம்!

Updated: Sun, Jul 13 2025 17:39 IST
Image Source: Google

Lord's Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி முதல் செஷனிலேயே அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களுக்கும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் அதிக பட்சமாக கேஎல் ராகுல் 13 பவுண்டரிகளுடன் 100 ரன்களையும், ரிஷப் பந்த் 8 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 74 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 72 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன் ஸ்கோரையும் சமன்செய்து அசத்தியது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஸாக் கிரௌலி 2 ரன்களுடனும், பென் டக்கெட் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் பென் டக்கெட் 12 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப் 4 ரன்னிலும் என முகமது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஸாக் கிரௌலியும் 22 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக் அதிரடியாக விளையாடிய நிலையில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜோ ரூட் 23 ரன்களுடனும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், நிதிஷ் ரெட்டி மற்றும் ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

Also Read: LIVE Cricket Score

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை