ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்பொர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார். 

Advertisement

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில்  5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் 28 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அரைசதம் கடந்து அசத்திய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த நிதீஷ் ரெட்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில்  9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று நான்காம் நாள் ஆட்டமானது அரைமணி நேர முன்கூட்டியே தொடங்கியது. அதன்படி தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை நிதீஷ் ரெட்டி 105 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற நிதீஷ் ரெட்டி 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்களில் ஆல் அவுட்டானது.  ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலண்ட், பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையும் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்ஸை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News