5th Test Day 1: இங்கிலாந்தை 218 ரன்களில் சுருட்டிய இந்தியா; முதல் இன்னிங்ஸில் அபார ஆட்டம்!

Updated: Thu, Mar 07 2024 17:01 IST
5th Test Day 1: இங்கிலாந்தை 218 ரன்களில் சுருட்டிய இந்தியா; முதல் இன்னிங்ஸில் அபார ஆட்டம்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.

எப்போதும் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இன்றைய போட்டியில் நிதான ஆட்டத்தை கையாண்டனர். இதன் மூலம் தொடக்க வீரர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்களைச் சேர்த்தனர்.  அதன்பின் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பென் டக்கெட் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப்பும் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.

ஆனாலும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸாக் கிரௌலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.  அதன்பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஸாக் கிரௌலி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பவுண்டரி, ஒரு சிக்சர் என 79 ரன்களைச் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயத்தினர். 

ஆதன்பின் ஜோ ரூட் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளயாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், டாம் ஹார்ட்லி 6 ரன்களுக்கும், மார்க் வுட் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் பென் ஃபோக்ஸும் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் இங்கிலாந்து அணி முதல்நாள் மூன்றாவது செஷனின் தொடக்கத்திலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் சிறப்பாக விளையாடியதுடன் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்த நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 57 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அசத்தினார். 

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரோஹித் சர்மா 52 ரன்களுடனும், ஷுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து 83 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை