T20 WC 2024: ஃபசல்ஹக் ஃபரூக்கி அபார பந்துவீச்சு; ஆஃப்கானிடம் சரணடைந்தது உகாண்டா!

Updated: Tue, Jun 04 2024 09:39 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். 

முதல் ஓவரில் இருந்தே இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதேசமயம் ஆஃப்கான் அணி கொடுத்த விக்கெட் வாய்ப்புகளையும் உகாண்டா அணி வீரர்கள் தவறவிட்டனர். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை விளாசியது. இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, அவரைத்தொடர்ந்து இப்ராஹிம் ஸத்ரானும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

இதன் மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப்பாக 154 ரன்களை குவித்த நிலையில், 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 70 ரன்களைச் சேர்த்திருந்த இப்ராஹிம் ஸத்ரான் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 76 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான் 2 ரன்களுக்கும், குல்பதின் நைப் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது நபி 14 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. உகாண்டா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் பிரையன் மசாபா, காஸ்மஸ் கேவூடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனைத்தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய உகாண்டா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

அணியின் தொடக்க வீரர் ரொனாக் படேல் முதல் பந்தை பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினாலும் அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாகினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரோஜர் முகாசாவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, மற்றொரு தொடக்க வீரரான சிமோன் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் நக்ராணி 6 ரன்களுக்கும், அல்பெஷ் ரம்ஜானி ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் உகாண்டா அணி 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

பின்னர் இணைந்த அலி ஷா மற்றும் ராபின்சன் ஒபுயா இணை ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட்டை இழப்பை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கினர். ஆனாலும் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஃபசல்ஹக் ஃபரூக்கி தனது அபாரமான பந்துவீச்சின் மூலம், 11 ரன்களைச் சேர்த்திருந்த அலி ஷா மற்றும் அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பிரையன் மசாபாவையும் அடுத்தடுத்து பந்துகளில் வெளியேற்றியதுடன், 14 ரன்களைச் சேர்த்து அணிக்கு நம்பிக்கை கொடுத்து வந்த ராபின்சன் ஒபுயாவின் விக்கெட்டையும் கைப்பற்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

அதன்பின் களமிறங்கிய பிலால் ஹசன் மற்றும் ஹென்றி ஆகியோர் ரஷித் கானின் அடுத்தடுத்து பந்துகளில் விக்கெட்டை இழந்தனர். இதனால் உகாண்டா அணியானது 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 58 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கான் அணி தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 5 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக், ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியானது 125 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தியதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரையும் அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை