டி20 உலகக்கோப்பை: அத்துமீறி களத்தில் நுழைந்த ரசிகர் - வைரலகும் காணொளி!

Updated: Sun, Jun 02 2024 07:19 IST
டி20 உலகக்கோப்பை: அத்துமீறி களத்தில் நுழைந்த ரசிகர் - வைரலகும் காணொளி! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்கியுள்ளது. எப்போதும் இல்லாத அளவில் இம்முறை 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ள காரணத்தனால் இத்தொடரின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்புகளுக்கும் அதிகரித்துள்ளன. அதிலும் கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பை தொடரை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் இந்திய அணியானது நடப்பு சீசனிலாவது கோப்பையை கைப்பற்றுமா என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இத்தொடருக்கு தயராகும் வகையில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நேற்றைய தினம் விளையாடியது. அதன்படி நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைக் குவித்தது. 

இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 53 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியானது தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மஹ்முதுல்லா - ஷாகில் அல் ஹசன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 40 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஹர்ஷ்தீப் சிங், ஷிவம் தூபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இப்போட்டியின் போது இந்திய அணி ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை சந்திக்க முயற்சி செய்தார். இதையடுத்து பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக களத்திற்கு வந்த அந்நபரை அழைத்துச்செல்லும் முயற்சியில் இறங்கினர். இருப்பினும் ரோஹித் சர்மா அந்த ரசிகருக்காக பாதுக்காப்பு ஊழியரிடம் ஒருசில வார்த்தைகளை கூறினார்.

ஏற்கெனவே இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தீவிரவாத தாக்குதலுக்கான மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர் ஒருவரும் பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரோஹித் சர்மாவை சந்திக்க ரசிகர் அத்துமீறி மைதானத்திற்கு நுழைந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை