Sanju Samson: எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகும் நிலையில், அவரை கேகேஆர் அணி தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

Advertisement

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. 

அதேசமயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி, 10 தோல்விகள் ஒரு முடிவில்லை என மொத்தமாக 8 புள்ளிகளை மட்டுமே பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில் இந்த சீசனுக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அணியில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. 

மேலும் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆணி வாங்க ஆர்வம் காட்டியதாகவும், அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை ராஜஸ்தான் அணி நிர்வாகம் மறுத்ததுடன், சஞ்சு சாம்சனை விடுவிக்கும் மனநிலையில் இல்லை என்றும், வரவிருக்கும் சீசனில் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி ராஜஸ்தான் ராயல்ஸில் இருந்து விலகுவதாக சஞ்சு சாம்சன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சஞ்சு சாம்சனை ஒப்பந்தம் செய்ய கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணி அதிக ஆர்வம் காட்டுவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சஞ்சு சாம்சாஇ தேர்வு செய்யும் அணிகளில் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது சிஎஸ்கே அல்ல. கேகேஆர் அணிதான் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

ஏனெனில் கேகேஆர் அணியிடம் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் கிடையாது. அது அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாவதாக, ஒரு கேப்டனை தேர்வு செய்தால் என்ன தவறு? அஜிங்க்யா ரஹானே சிறப்பாக கேப்டனாக இருந்து ரன்கள் குவித்துள்ளார் என்பதை நான் மறுக்கவில்லை. அஜிங்க்யா ரஹானே ஒரு பேட்ஸ்மேனாக - அவர் தொடக்க வீரராக களமிறங்குகிறார், இல்லையெனில் பேட்டிங் வரிசை கொஞ்சம் சிக்கலாக உள்ளது.

Also Read: LIVE Cricket Score

மேலும் அவர்களிடம் ஒரு வீரரையும் விடுவிக்க முடியும். அவர்கள் விரும்பினால், வெங்கடேஷ் ஐயரை விடுவித்து, கிட்டத்தட்ட ரூ. 24 கோடியை பெற முடியும், அதனை வைத்து அவர்களால் உண்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனால் அவர்கள் சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது” என தெரிவித்துள்ளார். இருப்பினும் அடுத்த ஐபிஎல் தொடருக்கு கால அவகாசம் உள்ள நிலையில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News